இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் இருந்து தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை துணை அமைச்சர் மனுஷா நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வந்த நிலையில், திடீரென அதிபர் சிறீசேனா, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த போது அரசியல் சர்ச்சை வெடித்தது. இதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த போதிலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் அதிபரும், ராஜபக்சவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் இருந்துதொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை துணை அமைச்சர் மனுஷா நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். அவர், தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனவுக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர் ரணில் விக்ரம்சிங்கேவை சந்தித்தார். பிரதமராக ராஜபக்ச நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என மனுஷா நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று சிறீசேனா அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.