கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததால் ஏற்பட்ட பல அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அதிபர் சிறீசேனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.
இலங்கை நாடாளுமன்றம் நிறைவடைவதற்கு 20 மாதங்கள் இருந்த நிலையில், அதிபர் சிறீசேனா அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமராக ராஜபட்சவை நியமித்தார். இதையடுத்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிபர் சிறீசேனாவின் இந்த சர்ச்சைக்குரிய முடிவை நிராகரித்து தேர்தல் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடிகளை தூவி வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிபர் சிறீசேனா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.
இந்தக் கூட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணி கட்சி பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததை அடுத்து, அந்த கட்சி அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், "இந்த குழப்பங்களை தொடங்கிவைத்த நீங்களே இதற்கு முடிவை கொண்டுவர வேண்டும். மேலும், இந்தக் கூட்டத்தில் எதற்காக பங்கேற்க வேண்டும் என்று எந்த காரணமும் தோன்றவில்லை" என்று தெரிவித்தது.
மேலும், நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.