பாலியல் புகார்களுக்கு உள்ளான 48 ஊழியர்களை பணி நீக்கம் செய்து கூகுள் நடவடிக்கை
சான் பிரான்சிஸ்கோ: 2016ம் ஆண்டு முதல் பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கும் கூகுள் நிறுவனம் 13 மூத்த மேலாளர்கள் உட்பட 48 பேரை இந்த காரணத்துக்காக பணி நீக்கம் செய்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: 2016ம் ஆண்டு முதல் பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கும் கூகுள் நிறுவனம் 13 மூத்த மேலாளர்கள் உட்பட 48 பேரை இந்த காரணத்துக்காக பணி நீக்கம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி சுந்தர் பிச்சை இது குறித்து கூகுள் ஊழியர்களுக்கு வெளியிட்டிருக்கும் கடிதம் தொடர்பான செய்தி பிபிசி உள்ளிட்ட ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதில், தவறான நடத்தையுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது, பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்துவதில் கூகுள் நிறுவனம் மிகக் கடினமான முறையையே இதுவரை கையாண்டு வந்துள்ளது. ஒவ்வொரு பாலியல் புகாரையும் மிகக் கவனமாக கையாண்டு, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் புகார் தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட எந்த ஊழியருக்கும் கடந்த 2 ஆண்டுகளில் எந்த பணிக்கொடையும் வழங்கப்படவில்லை என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ஆன்டிராய்ட் போன் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த ஆன்டி ரூபின், பாலியல் புகார் தொடர்பாகவே பணி நீக்கம் செய்யப்பட்ட தகவலும் தற்போது தெரிய வந்துள்ளது.
பெண் ஊழியர் ஒருவர் அளித்த புகாரை விசாரித்த கூகுள் நிறுவனம், புகாரில் உண்மை இருப்பதை அறிந்து கொண்டதாகவும், இதனை மறுத்த ஆன்டி ரூபின், தாமாகவே பணியை விட்டு விலகுவதாக அறிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை கூகுள் உறுதி செய்யவில்லை.
அப்போது ஆன்டி ரூபினுக்கு 90 மில்லியன் டாலர் பணிக்கொடையாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரூபினின் செய்தித் தொடர்பாளர் சாம் சிங்கர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.