ஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அரபு பிரிவினைவாதிகளே காரணம் என அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க புறப்படுதவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ரௌஹானி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஈரான் அணிவகுப்பில் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். எந்த குழு இதை செய்தது, அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பதும் ரகசியமான ஒன்றல்ல. சதாம் ஹுசைன் இருந்தபோது கூலிக்காக வேலை செய்தவர்கள் தற்போது முதலாளியாக மாறிவிட்டனர். அவர்களே பேரழிவு தாக்குதலை நிகழ்த்தியவர்கள்.
பாரசீக வளைகுடாவில் உள்ள தெற்கு நாடுகளில் ஒன்று ஈரானை தாக்கிய பயங்கரவாதிகளுக்கு தேவையான நிதி உதவி, ஆயுத உதவி, அரசியல் ஆதரவு ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இந்த பிராந்தியத்தில் காணப்படும் சிறிய கூலிப்படை நாடுகள் அனைத்துக்கும் பின்புலமாக இருப்பது அமெரிக்கா. இதுபோன்ற தாக்குதல்கள் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரிலேயே நடைபெறுகின்றன என்றார் அவர்.
ஈரான் மற்றும் இராக் நாடுகளுக்கிடயே கடந்த 1980-1988 ஆண்டில் கடும் போர் நடைபெற்றது. இதனை நினைவுகூறும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டு ஆஹ்வாஸ் நகர் பூங்கா அருகே சனிக்கிழமை நடைபெற்ற போர் நினைவுதின நிகழ்ச்சியில் ராணுவத்தினர் பங்கேற்ற அணி வகுப்பு நடைபெற்றது.
அப்போது ஈரான் ராணுவத்தினரின் உடையில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அணிவகுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர். பின்னர், இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது.
இருப்பினும், அரபு பிரிவினைவாத அமைப்பான அல்-அஹ்வாஸி இந்த தாக்குதலின் பின்னணியில் முக்கிய மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்று ஈரான் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு அரபு பிரிவினைவாதிகளே காரணம் என ஈரான் அதிபர் ரௌஹானி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.