1997-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பாதுகாப்பான 3 நகரங்களில் ஒன்றாக கருதப்படும் எல் பாஸோவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள எல் பாஸோ நகரில் மர்ம நபரால் சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அப்பகுதியில் அமைந்துள்ள சிலோ விஸ்டா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வால்மார்ட்டில் திடீரென புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இந்த கோர சம்பவத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அம்மாகாண ஆளுநர் உறுதி செய்தார். சுமார் 3 ஆயிரம் பேர் சூழ்ந்திருந்த வால்மார்ட்டில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாட்ரிக் க்ரூஸியூஸ் எனும் 21 வயது இளைஞருக்கு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக எல் பாஸோ போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 4 பேர் வரை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வால்மார்ட்டில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தகவல் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் கலிஃபோர்னியாவில் உணவுத்திருவிழாவின் போது சாண்டினோ வில்லியம் லீகன் என்ற 19 வயது இளைஞர் நடந்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். பின்னர் அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.
அமெரிக்காவில் 2019-ல் இதுவரை மட்டும் 21 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 96 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இதுபோன்று பொது இடங்களில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 21 வயதுக்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர்.