சிரியாவில் துருக்கி ராணுவத்தின் கண்காணிப்பு நிலையை அல்-அஸாத் ஆதரவுப் படையினர் வெள்ளிக்கிழமை சுற்றிவளைத்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாவது: சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மாகாணமான இத்லிபை மீட்பதற்காக, ரஷிய உதவியுடன் அந்த நாட்டு ராணுவம் கடந்த ஏப்ரல் மாதம் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த நிலையில், இத்லிப் மாகாணத்தையொட்டிய ஹமா மாகாணத்தில் அமைந்துள்ள மோரெக் நகருக்குள் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை நுழைந்தனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கும், சிரியா அரசுக்கும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்கீழ், போர் நிறுத்தப் பகுதி உருவாக்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக சிரியாவில் துருக்கி கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ளது. அந்த ஒப்பத்தின்படி கிளர்ச்சியாளர்கள் தங்களது பகுதிகளைவிட்டு வெளியேறாமல் இருந்து வந்த நிலையில், ரஷிய உதவியுடன் அவர்கள் மீது சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தியது.
எனினும், சிரியாவிலுள்ள தங்களது நிலைகள் அகற்றப்படமாட்டாது எனினும், அந்த நிலைகளிலுள்ள தங்களது வீரர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் துருக்கி திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்தச் சூழலில் மோரெக் நகரிலுள்ள துருக்கி ராணுவ நிலையை சிரியா படையினர் சுற்றிவளைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.