கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் தலைமைச் செயல் அதிகாரியாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நியமனம்
ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
தொழில்நுட்ப பெருநிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இதன்மூலம் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் ஆகிய இரு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக இனி சுந்தர் பிச்சை செயல்படவுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராகவும் சுந்தர் பிச்சை தொடர்கிறார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் மூலம் வேய்னோ (தானாக இயங்கும் கார்கள்), வெர்லி (வாழ்வுமுறை அறிவியல் தொழில்நுட்பம்), கேலிகோ (பயோடெக் ஆராய்ச்சி), சைட்வாக் லேப்ஸ் (நகர்ப்புற தொழில்நுட்ப வளர்ச்சி) மற்றும் லூன் ( பலூன் தொழில்நுட்பம் மூலமாக ஊரக இணைய வளர்ச்சி) உள்ளிட்ட பல கிளை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
கூகுள் இணை நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் ப்ரின் ஆகியோர் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக ஆதிகாரி, பங்குதாரர்கள் ஆகிய பணிகளில் தொடர்ந்து பணியாற்றவுள்ளனர்.