மாலியில் தேடப்பட்டு வந்த அல்-காய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தளபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தளபதியான அல்ஜீரியாவைச் சேர்ந்த ஜமீல் ஒகாச்சா, பிரான்ஸ், மாலி உள்ளிட்ட நாடுகளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியவர் ஆவார். மேலும், வடக்கு மற்றும் மேற்கு ஆப்பிக்கப் பகுதியில் இருந்த மேற்கத்திய நாடுகளைச்
சேர்ந்த பலரை அவர் கடத்தியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அவரைப் பல ஆண்டுகளாக பிரான்ஸ் பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் மாலியில் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலமும் ஆளில்லா சிறியரக விமானங்கள் மூலமும் அவரது இடத்தைக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினர், ஹெலிகாப்டரில் இருந்து அவர் சென்ற கார் மீது தாக்குதல்
நடத்தினர். இதில் ஜமீல் ஒகாச்சா உள்பட 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.