காபுல்: ஆப்கானிஸ்தானில் அங்கீகாரம் பெறாத தங்கச் சுரங்கம் ஒன்றில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில், 30 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ளது படாக்ஷான் மாகாணம். இங்குள்ள கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.எனவே அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு தோண்டப்பட்ட சுமார் 200 அடி ஆழ சுரங்கத்துக்குள் சிலர் இன்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கம் திடீரென்று உள்பக்கமாக சரிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் முன்னரே உள்ளூர் மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவகின்றன.