ஆப்கன் உளவுத் துறை பயிற்சி மையத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
முதலில் வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதிகள் அந்தப் பயிற்சி மையத்தில் மோதி வெடிக்கச் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து காரில் வந்த பயங்கரவாதிகள் அந்த மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வர்தாக் மாகாணத் தலைநகர் மைதான் ஷஹரில், ஆப்கன் உளவு அமைப்பான தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் பயிற்சியகம் அமைந்துள்ளது.
அந்த மையத்துக்கு வெடிபொருள் நிரப்பிய காரை திங்கள்கிழமை ஓட்டி வந்த
பயங்கரவாதி, அதனை பயிற்சியகக் கட்டடத்தில் மோதி வெடிக்கச் செய்தார்.
சக்தி வாய்ந்த அந்த குண்டுவெடிப்பில் பயிற்சிகத்தின் கூரைச் சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அதனைத் தொடர்ந்து, காரில் வந்த 3 பயங்கரவாதிகள் அந்த பயிற்சி மையத்துக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
உடனடியாக, அந்த 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
எனினும், கார் குண்டு வெடிப்பில் கூரைச் சுவர் இடிந்து விழந்ததில் பெருமளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
65 பேர் பலி: இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டாலும், சம்பவப் பகுதியிலிருந்து 65 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து வர்தாக் மாகாண கவுன்சில் துணைத் தலைவர் முகமது சர்தார் பக்யாரி கூறுகையில், தாக்குதலில் இடிந்து விழுந்த உளவுத் துறை பயிற்சியகக் கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து 65 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மிகப் பெரிய இழப்பு: தலிபான்கள் தாக்குதலில் உளவுத் துறையினர் உயிரிழந்தது, ஆப்கனுக்கு மிகப் பெரிய இழப்பு என்று வர்தாக் மாகாண கவுன்சில் தலைவர் அக்தார் முகமது தாஹிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது.
ஆப்கன் காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினரைவிட உளவுத் துறை வீரர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சியும், அதி நவீன ஆயுதங்களும் அளிக்கப்படுகின்றன.
அவர்களது இழப்பு, ஆப்கானிஸ்தானுக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும் என்றார் அவர்.
பொதுவாக, தலிபான் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் குளிர்காலங்களில் மிதமாகவே காணப்படும்.
எனினும், அதற்கு மாறாக, அண்மைக் காலங்களில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
லோகர் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
பலி எண்ணிக்கையில் குழப்பம்...
மைதான் ஷஹர் உளவுத் துறை பயிற்சி மையத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தாக்குதலில் 12 பேர் மட்டுமே உயிரிழந்ததாக முதலில் அதிகாரிகள் தெரிவித்தாலும், திங்கள்கிழமையே 65 உடல்கள் மீட்கப்பட்டதாக வர்தாக் மாகாண கவுன்சில் துணைத் தலைவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதற்கிடையே, பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர், தாக்குதலில் 70 பேர் பலியானதாகத் தெரிவித்தார்.
எனினும், 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தப்பட்ட மையம் ஆப்கன் உளவுத் துறையினருக்கான பயிற்சியகம் என்பதால், அங்கு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைப் பெறுவது கடினம்; எனவே,
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவலைப் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.