மேற்கு வங்க மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியதாகப் பிடிபட்ட இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில், இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மால்டா மாவட்டம் பைஷ்ணாப் நகர் பஜார் பகுதியில் கடந்த புதன்கிழமை சனெளல் ஷேக் (20) என்ற இளைஞர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அந்த நபரை சுற்றி வளைத்துத் தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷேக் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த இளைஞரை தாக்கிய விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், இளைஞரின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கு காரணமான இருவரை போலீஸார் கைது செய்ததாக மால்டா மாவட்ட காவல்துறை எஸ்.பி. அலோக் ரஜெளரி தெரிவித்தார்.
தாக்குதலில் பலியான நபர் ஏற்கெனவே பல திருட்டு சம்பவங்களில் கைதானவர் என்று மால்டா நகராட்சி உறுப்பினர் ஒருவர் கூறினார்.