இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்குத் தூதரக உதவிகள் வழங்கப்படும் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.
ஜாதவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மற்ற நாட்டுக் கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் குறித்து, வியன்னா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் குல்பூஷண் ஜாதவுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டன. சட்டங்களை மதித்து நடக்கும் நாடு பாகிஸ்தான். அந்த வகையில், நாட்டின் சட்டங்களுக்கு உள்பட்டு ஜாதவுக்கு வேண்டிய தூதரக உதவிகள் அனைத்தையும் வழங்க பாகிஸ்தான் உறுதிகொண்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி, குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டுமென உத்தரவிட்டது.
சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் அளிக்க வேண்டுமென உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றம், இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் வரை குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.