உலகம்

பேரவையில் நாடுகடத்தும் சட்ட மசோதா: ஹாங்காங் அரசு திட்டவட்டம்

DIN


ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீனப் பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் தெரிவித்துள்ளார்.
அந்தச் சட்டத்துக்கு ஹாங்காங்கில் பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரீ லாம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கைதிகள் பரிமாற்றச் சட்ட மசோதா ஹாங்காங் சட்டப் பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.
அந்தச் சட்டம் குறித்து தனியார் துறையினர் தெரிவித்த கவலைகளை கருத்தில் கொண்டு, மசோதாவில் சில மாற்றங்களைச் செய்துள்ளோம்.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
சர்ச்சைக்குரிய அந்த மசோதா மீதான விவாதம் ஹாங்காங் சட்டப் பேரவையில் புதன்கிழமை மீண்டும் தொடங்கும் எனவும், இந்த மாதத்துக்குள் அது வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை நாடுகடத்துவது தொடர்பான புதிய வரைவுச் சட்டத்தின்படி, சீன பெருநிலப் பகுதி உள்பட ஹாங்காங்குடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொள்ளாத பகுதிகளுக்குக் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை நாடுகடத்த முடியும்.
இதற்கு, ஹாங்காங் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர், ஜனநாயக ஆதரவாளர்கள் மட்டுமன்றி, ஹாங்காங்கின் முக்கிய நீதி அமைப்புகளான சட்டச் சங்கமும், வழக்குரைஞர்கள் மன்றமும் குரல் கொடுத்து வருகின்றன.
புதிய சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, ஹாங்காங்கில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டமாக அது இருந்தது.
இந்தச் சூழலில், ஹாங்காங் அரசின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT