கொழும்பு: இலங்கை அரசின் புதிய உளவுத்துறை தலைவராக ருவன் குலதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த தாக்குதல்களில் 258 பேர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதல் குறித்து விசாரிக்க இலங்கையின் பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது.
இந்தக்குழுவின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்த அப்போதைய இலங்கை உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ், தீவிரவாத தாக்குதலுக்கு முன்பாகவே, உளவுத்துறை எச்சரிக்கைத் தகவல் பரிமாறப்பட்டது என்றும், ஆனால் அதிகாரிகள் அலட்சியம் செய்துவிட்டதாகவும் கூறி இருந்தார்.
அத்துடன் துரிதமாகச் செயல்பட்டிருந்தால் இந்த தாக்குதலைத் தடுத்து இருக்கலாம் என்றும், பயங்கரவாத அச்சுறுத்தல் அபாயம் இருந்த போதும், தொடர் பாதுகாப்பு ஆலோசனைகளை மேற்கொள்ள அதிபர் சிறிசேனா தவறிவிட்டார் என்று கூறியிருந்தார். இதையடுத்து சிசிரா மென்டிஸ் உளவுத்துறை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இலங்கை அரசின் புதிய உளவுத்துறை தலைவராக ருவன் குலதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.