ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது. இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஜி20 உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அறிவிக்கப்படாத பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இதில் பிரேஸில் அதிபர் ஜெய்ர் பால்சோனரோ, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சைரில் ரமபோஸா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊழல், கறுப்புப் பணம் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மற்றும் பண மோசடி உள்ளிட்டவற்றால் சர்வதேச அளவில் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார முன்னேற்றத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த உலகளவிலான சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.