நெதர்லாந்தில் யூடிரெக்ட் நகரில் டிராம் வாகனத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூன்று பேர் பலியாகினர். திங்கள்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
முன்னதாக, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தனது முகத்தை முழுவதுமாக மறைத்தபடி, டிராம் வண்டியின் இயக்கத்தை தடுக்கும் வகையில் அதன் ஓடுபாதையின் நடுவே தடுப்பை ஏற்படுத்தி நிறுத்தியுள்ளார்.
பின்னர், டிராம் வண்டியில் ஏறி பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் துருக்கியைச் சேர்ந்த அகதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்தனர். இனவெறி அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இதுபோன்ற தாக்குதல் சகிப்புத்தன்மை இல்லாததைக் காட்டுகிறது. நாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள, அச்சுறுத்தலையும், சவால்களையும் தைரியத்துடன் எதிர்கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தையில் பிரதமர் மார்க் ரூட்டே ஈடுபட்டார்.