ஆவண மோசடி வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரியும், அவரது மகன் பிலாவல் புட்டோ ஜர்தாரியும் அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்கள்.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி டான் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் அவரது மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரிவுக்குச் சொந்தமான பார்க் லேன் எஸ்டேட் என்ற மனை வணிக நிறுவனம், வங்கியிலிருந்து முறைகேடாக கடன் வாங்கியது தொடர்பாக தேசிய ஊழல் தடுப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
பஞ்சாப் மாகாண வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கள் நிறுவனத்துக்கு இருவரும் மாற்றிக் கொண்டதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஜர்தாரிக்கும், பிலாவலுக்கும் அந்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதையடுத்து, அந்த இருவருக்கும் சிந்து மாகாண உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை 10 நாள்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது.
அதையடுத்து, ஜர்தாரியும், பிலாவலும் இஸ்லாமாபாதிலுள்ள தேசிய ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினர்.
அங்கு, அதிகாரிகளின் கேள்விக்கு தங்களது பதில்களை அவர்கள் பதிவு செய்தனர்.