பள்ளி மாணவர்கள் நிறைந்திருந்த பேருந்துக்கு ஓட்டுநர் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டில் செனெகலீஸ் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஓட்டுநர் ஔஸைநோ சைய் (47), பேருந்துக்கு தீ வைத்தார். அந்த பேருந்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் உட்பட 51 இருந்தனர்.
இந்நிலையில், துரிதமாக செயல்பட்ட போலீஸார், அந்த பேருந்தில் சிக்கியிருந்த மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் ஓட்டுநரையும் கைது செய்தனர். 12 மாணவர்கள் மற்றும் 2 பேர் மட்டும் புகை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
முன்னதாக, மெடிட்டேரியன் கடல்பகுதியில் நடந்து வரும் இறப்புகளைத் தடுக்க தான் தற்கொலை செய்துகொள்ள விரும்பியதாக கூறிய ஓட்டுநர், பேருந்தில் இருந்தவர்களை கத்தியைக் கொண்டு பயமுறுத்தியுள்ளார். அதில் ஒரு மாணவர் மட்டும் துரிதமாக செயல்பட்டு தனது பெற்றோருக்கு செல்ஃபோனில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெற்றோர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.