அது காபியோ அல்லது பீரோ, ஏன் உங்களுக்குப் பிடிக்கிறது தெரியுமா?
காபி அல்லது பீர் போன்ற பானங்கள் ஏன் ஒருவருக்கு பிடிகின்றது என்பது தொடர்பான மரபணு ரீதியிலான சோதனையின் முடிவு வெளியாகி இருக்கிறது.
நியுயார்க்: காபி அல்லது பீர் போன்ற பானங்கள் ஏன் ஒருவருக்கு பிடிகின்றது என்பது தொடர்பான மரபணு ரீதியிலான சோதனையின் முடிவு வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலையின் கீழ் வரும் பெய்ன்பெர்க் மருத்துவ கல்வி நிலையத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் விக்டர் ஹோங் மற்றும் மரிலின் கார்லினாஸ் ஆகிய இருவர் தலைமையிலான குழுவினர் இணைந்து ஒரு ஆய்வு நடத்தினர்.
அதன்படி மனிதர்களின் சுவை அறியும் மரபணுக்களில் காணப்படும் வேறுபாடுகள் குறித்து அவர்களது குழுவினர் விரிவான ஆய்வு நடத்தினர். அதன்மூலம் என்ன விதமான பானங்கள் நமக்குப் பிடிக்கும் என்பது குறித்து அவர்கள் உணர்ந்து கொள்ள எண்ணினார்கள். இதனை அறிந்து கொள்வதன் மூலமாக மனிதர்களின் உணவுப் பழக்கத்தினை குறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று அவர்கள் திட்டமிட்டனர்.
Advertisement
Advertisement
இதற்காக பானங்களை அவர்கள் இனிப்புச் சுவை கொண்டவை மற்றும் கசப்புச் சுவை கொண்டவை என்று இரண்டாக பிரித்துக் கொண்டனர். அதில் காபி, டீ, திராட்சை சாறு, பீர் மற்றும் ரெட் வைன் ஆகியவை கசப்புச் சுவை கொண்டவையாக இனம் காணப்பட்டன.
அவர்கள் இதற்காக 3,36,000 பேரிடம் கேள்வித்தாள் ஒன்றைக் கொடுத்து சோதனை நடத்தினர். அதில் அவர்கள் அந்த சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன விதமான உணவை சாபிட்டார்கள் மற்றும் எந்த விதமான பானங்களைப் பருகினார்கள் என்பது குறித்தான கேள்விகளைக் கேட்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளில் பங்கேற்றவர்கள் அளித்த பதில்களுடன், பதிலளித்த நபர்களின் மரபணு குறித்த ஒத்திசைவு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆராய்ச்சியின் முடிவில் எந்த வகை சுவை தரும் பானமானாலும் சரி, அது நமக்கு ஏன் பிடிக்கிறது என்பது, அந்த பானம் நமது சுவை அறியும் மரபணுக்களில் உண்டாக்கும் மாற்றத்திற்காக அல்ல; அந்த பானம் நமது உளவியல் தொடர்பான மரபணுக்களில் உண்டாக்கும் மாற்றத்திற்காகவே அதை நாம் விரும்புகிறோம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேரராசிரியர் மரிலின் கார்லினாஸ் பேசும்போது. 'பொதுவாகவே மனிதர்கள் காபியையோ அல்லது பீர் போன்ற மதுவையோ அது தரும் உணர்வுக்காகவே குடிக்கிறார்கள். அதனுடைய சுவைக்காக அல்ல' என்று தெரிவித்தார்.
அதுபோல இந்த ஆய்வின் தலைமை நிபுணரான விக்டர் ஹோங் கூறும்போது, 'எங்களது அறிவுக்கு எட்டியவரை பானங்களை உட்கொள்வது தொடர்பாக இதுநாள் வரை நடத்தப்பட்ட ஆய்வுகளிலேயே இதுதான் விரிவான மரபணு சார் ஒத்திசைவு ஆய்வாகும்' என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வு தொடர்பான கட்டுரையானது சர்வதேச அளவில் புகழ்பெற்ற "ஹியூமன் மாலிக்யூலர் ஜெனிடிக்ஸ்" இதழில் வெளியாகியுள்ளது.