ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப், உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு இருதய நோய் பாதிப்பு காரணமாக, சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இதையடுத்து, உயர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் கோரி, நவாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், நவாஸூக்கு 6 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், தனக்கு நிரந்தர ஜாமீன் வழங்கக் கோரி நவாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கடந்த 7-ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
இந்நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நவாஸ் தரப்பில் திங்கள்கிழமை மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "நவாஸ் ஷெரீஃப் மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவரது உடலில் சர்க்கரை அளவும் சீராக இல்லை. இவற்றால், அவரது உயிருக்கு ஆபத்து நேரும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, வெளிநாட்டில் சிகிச்சை பெறும்பொருட்டு, நவாஸூக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.