தெற்காசியாவில் முதல்முறையாக இந்தியா, நேபாளம் இடையே மோடிஹரி-அம்லேகாஞ்ச் எரிவாயு குழாய் செவ்வாய்கிழமை திறக்கப்பட்டது. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி ஆகியோர் விடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் திறந்து வைத்தனர்.
இதன்மூலம் இருநாடுகளின் நல்லுறவு மேம்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அம்சம் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:
தெற்காசியாவிலேயே முதல்முறையாக இந்தியா, நேபாளம் இடையே எரிவாயு குழாய் திட்டமிட்ட காலத்தை விட வெகு விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றால் இது திட்டமிடப்பட்டதை விட பாதி காலத்துக்கு முன்னதாகவே முடிவடைந்துள்ளது.
இதற்காக நேபாள அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். குறித்த நேரத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அவர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. இதன்மூலம் இருநாடுகளின் நல்லுறவு மேம்பட்டு, பாதுகாப்பு அம்சமும் அதிகரித்துள்ளது. இதனால் எரிவாயு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு குறைந்துள்ளது.
2015-ல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இருந்து நேபாளம் மீண்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். அதுபோன்ற ஒரு இக்கட்டான தருணத்தில் நேபாளத்தின் நெருங்கிய நண்பனான இந்தியா தான் துணை நின்றது. இதையடுத்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றியதில் புதிய வீடுகள் மீண்டும் உருவாக்கப்பட்டன.
நேபாளத்தில் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.