முகப்பு
உலகம்

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார்: உறுதிப்படுத்தினார் டிரம்ப்

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன், அமெரிக்க தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபடுத்தியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:05 AM
பகிர்:


அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன், அமெரிக்க தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள குறிப்பில்,

"ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பகுதியில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரும், ஒசாமா பின்லேடனின் மகனுமான ஹம்ஸா பின்லேடன் அமெரிக்க தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டார். பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து, திட்டம் வகுப்பதற்கு ஹம்ஸா பின்லேடன்தான் பொறுப்பு. அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கு இது இழப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை. அந்த அமைப்பின் பல்வேறு முக்கியமான செயல் திட்ட நடவடிக்கைகளை வலுவிழக்கச் செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     

எனினும், ஹம்ஸா பின்லேடன் குறிப்பாக எந்த இடத்தில், எந்தச் சூழலில் கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவலை டிரம்ப் வெளியிடவில்லை. ஹம்ஸா பின்லேடன் கடைசியாக 2018-இல் தனது பொது அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிட்டார்.

ஒசாமா பின்லேடனின் 3-ஆவது மனைவிக்குப் பிறந்த ஹம்ஸா பின்லேடன், அவரது 20 குழந்தைகளில் 15-ஆவதாகப் பிறந்தவர். அவருக்கு 30 வயது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க: பின்லேடன் மகன் இறந்துவிட்டார்: அமெரிக்க ஊடகம்

முன்னதாக, ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி செய்தி வெளியிட்டனர். ஆனால், அப்போது ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்தத் தகவலை மறுக்கவோ, ஆமோதிக்கவோ அவர் மறுத்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.