கராச்சி: உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடி வரும் நிலையிலும், பாகிஸ்தான் அரசோ மத ரீதியில் மக்களைப் பிரித்து உணவு வழங்கி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், உணவு வழங்கல் துறை அதிகாரிகள், அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை வழங்குவதில்லை என்றும், இந்த நிவாரணம் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே என்று தெரிவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள அரசு அதிகாரிகள் எங்களுக்கு உதவுவதில்லை. பொது வழங்கல் துறையின் உணவுகளைக் கூட வழங்க மறுக்கிறார்கள். நாங்கள் அங்கு சிறுபான்மையினராக இருப்பதால் எங்களுக்கு இந்த நிலை என்று இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொது வழங்கல் துறை மூலம் பொருட்கள் வாங்க குவிந்த மக்களில் இந்துக்களும் இருந்தனர். இந்த பொருட்கள் அனைத்தும் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே என்று அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
போதிய உணவின்றியும், தொழில்கள் முடங்கியதால் பணமின்றியும் ஏராளமான இந்துக்கள் தவித்து வருவதாகவும், எங்களுக்கு தனியாக உணவு பொருட்கள் டிரக்கில் வருகிறது என்று அதிகாரிகள் கூறி எங்களை திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். ஆனால் எந்த டிரக்கிலும் எங்களுக்கான உணவு வரவில்லை என்று வருத்தத்தோடு கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.