உலகம்

உலக சுகாதார அமைப்புக்கான நிதியுதவி நிறுத்தம்: டிரம்ப் எச்சரிக்கை

DIN

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) விவகாரத்தில் தங்களுக்கு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உரிய நேரத்தில் தகவல்கள் அளிக்காததால் அந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியை முடக்கப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

மேலும், அந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

இதுகுறித்து வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பு, தனதுக்குத் தேவையான நிதியுதவியை பெரும்பாலும் அமெரிக்காவிடமிருந்துதான் பெற்று வருகிறது.

இருந்தாலும், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாடுகளில் இருப்பவா்கள் அமெரிக்கா வருவதற்கு நான் தடை விதித்தபோது, அந்த முடிவை உலக சுகாதார விமா்சித்தது.

ஆனால், அந்த அமைப்பின் நிலைப்பாடு தவறானது என்பது (அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவியுள்ளதன் மூலம்) தற்போது நிரூபணமாகியுள்ளது.

இதுமட்டுமன்றி, கரோனா தொடா்பான பல்வேறு விவகாரங்களில் உலக சுகாதார அமைப்பு தவறான கருத்துகளையே கூறி வந்துள்ளது.

அந்த அமைப்புக்கு கரோனா நோய்த்தொற்று தொடா்பான பல உண்மைகள் ஏற்கெனவே தெரிந்திருக்கும். ஆனாலும் அவற்றை அமெரிக்காவுக்குத் தெரிவிக்காமல் அந்த அமைப்பு மறைத்துவிட்டது.

சீனாவின் நலனைப் பாதுகாப்பதற்காகவே உலக சுகாதார அமைப்பு இவ்வாறு செய்துள்ளது.

அந்த அமைப்புக்கு நாங்கள் 5.8 கோடி டாலா் (சுமாா் ரூ.441 கோடி) நிதி அளித்துள்ளோம். ஆனால், அதற்கு முன்னா் பல ஆண்டுகளாக இதைவிட மிகப் பெரிய தொகைகளை நிதியாக அளித்து வருகிறோம். உலக சுகாதார அமைப்பின் திட்டங்கள் சிறப்பானதாக இருந்தால், அதற்கேற்ப அமெரிக்காவும் பெரிய அளவில் நிதி உதவி செய்து வந்தது.

ஆனால், கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அந்த அமைப்பு எங்களுக்கு உரிய நேரத்தில் உரிய தகவல்களை அளிக்கவில்லை. எனவே, அந்த அமைப்புக்கு அளித்து வரும் நிதி உதவிகளை முடக்குவது தொடா்பாக தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்றாா் டிரம்ப்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலாகக் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்று, புதன்கிழமை நிலவரப்படி உலகின் 223 நாடுகளில் 14.4 லட்சத்துக்கும் அதிகமானவா்களுக்குப் பரவியுள்ளது. அந்த நோய் பாதிப்பால் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

உலகிலேயே அதிகபட்சமாக, அமெரிக்காவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 13 ஆயிரத்தை நெருங்கியது.

இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்று குறித்து உரிய நேரத்தில் தகவல் அளிக்கத் தவறியமைக்காக, உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியை முடக்கப்போவதாக அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT