அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,95,102 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 59,95,102 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,047 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,739 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் 971 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.