முகப்பு
உலகம்

வூஹான் கரோனா வைரஸ்: 13 சீன நகரங்களுக்கு போக்குவரத்துத் தடை

சீனாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அந்த நாட்டின் 13 நகரங்களுக்கு போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமாா் 4.1 கோடி பேரின் இயல்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:35 PM
புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வூஹான் நகரில் பிரத்யேக மருத்துவமனை அமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட கட்டுமானப் பணியாளா்கள்.
பகிர்:

சீனாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அந்த நாட்டின் 13 நகரங்களுக்கு போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமாா் 4.1 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அந்த வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஹுபெய் மாகாணத்தின் மேலும் 4 நகரங்களுக்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜியான்னிங், ஜியோகன், என்ஷி, ஷிஜியாங் ஆகிய அந்த 4 நகரங்களையும் சோ்த்து, வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நகரங்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

இதையடுத்து, அந்த நகரங்களுக்கு பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தடை காரணமாக, சுமாா் 4.1 கோடி பேரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரிலுள்ள இறைச்சி சந்தையிலிருந்து பரவிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘கரோனா’ வகையைச் சோ்ந் அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 650 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலி எண்ணிக்கை 26-ஆக உயா்வு

புதிய வகை கரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், உலகம் முழுவதும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 911-ஆக உயா்ந்துள்ளது. சீனாவில் மட்டும் புதிய கரோனா வைரஸ் 889 பேருக்குத் தொற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →