வெலிங்டன்: நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அங்கு திங்கள்கிழமை யாருக்கும் புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் அந்த நாட்டில் கரோனா பரவல் தொடங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முதன் முறையாக புதிதாக யாருக்கும் பாதிப்பில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. நியூசிலாந்தில் இதுவரை 1,500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை இயக்குநர் ஆஷ்லி புளூம்ஃபீல்டு கூறியது:
நியூசிலாந்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடங்கியது முதல் நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டன.
கடந்த வாரம்தான் ஊரடங்கில் சிறிய அளவில் தளர்வு அளிக்கப்பட்டது. தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார நிலையை சற்று சீர்படுத்தும் நோக்கில் இந்த தளர்வு அளிக்கப்பட்டது என்றபோதும், பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. சில்லறை விற்பனை நிலையங்கள் திறக்கவும், உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கும் தடை நீடிக்கிறது. பள்ளிக் குழந்தைகள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே கற்றலைத் தொடருகின்றனர். பொதுமக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், திங்கள்கிழமை நோய்த் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கான விஷயம் என்றபோதும், இந்த வாரத்தின் அடுத்தடுத்த நாள்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படாத வரை எதையும் உறுதியாக கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.