அமெரிக்காவில் கருப்பினத்தவர் சுட்டுக்கொலை: காவல்துறை தரப்பில் விடியோ வெளியீடு
அமெரிக்காவில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கருப்பினத்தவரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் காவல்துறை தரப்பில் விடியோ வெளியீடு
அமெரிக்காவில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கருப்பினத்தவரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல்துறை தரப்பில் விடியோவொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பிலடெல்பியா பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியுடன் சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு வந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையை சேர்ந்த இருவர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.
அப்போது வீட்டின் வெளியே கத்தியுடன் வந்த வால்டர் வெல்லஸ் என்ற 27 வயது நபரை சுற்றிவளைத்த காவலர்கள், கத்தியை கீழே போடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவருடைய தாய் தெரிவித்தபோதிலும், வால்டர் வீதியில் கத்தியுடன் இறங்கி வந்ததால் காவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.
வால்டர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிலடெல்பியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஏற்கெனவே மே மாதத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், தற்போதைய போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வால்டரை சுட்டுக்கொன்ற விடியோவை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
விடியோவில் வீட்டின் வெளியே கத்தியுடன் வந்த வால்டரை காவல்துறையினர் சுற்றிவளைக்கின்றனர். எனினும் கார்களின் மறைவில் வால்டர் தப்பித்துச் செல்ல முயற்சி செய்கிறார். அவரது தாய், வால்டர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி காப்பாற்ற முயன்றும், வால்டர் மக்களை நோக்கி வந்ததால், காவலர்களில் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். இதில் அந்த இடத்திலேயே வால்டர் உயிரிழந்தார்.
இந்த விடியோவைத் தொடர்ந்து மேலும் வன்முறையைத் தூண்டாமல் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று நகர மேயர் கென்னடி கேட்டுக்கொண்டுள்ளார்.
வால்டர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்த பின்னரும் காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றும், நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள காவலர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் குறிப்பிடுகின்றனர்.