வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,77,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக ஒருநாள் சராசரி பாதிப்பு 1 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய மேற்கு மாகாணங்களான இலினொய், அயோவா, கன்சாஸ் மற்றும் ஒகையோ உள்ளிட்ட மாகாணங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருதால் அங்கு மருத்துவ சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை) 1,77,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,10,66,546 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,49,998 பேர் வரையில் உயிரிழந்துள்ளன்ர், 67,90,144 பேர் குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.