கடந்த 2 வாரங்களில் தலிபான் குழுக்கள் நடத்தியத் தாக்குதலில் இதுவரை 98 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக ஆப்கன் அரசுக்கும், தலிபான் குழுக்களுக்குமிடையே தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆப்கன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இதுவரை 24 மாகாணங்களில் தலிபான் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை 98 பொதுமக்களும், 30 பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் தலிபான் குழுக்களின் தாக்குதலால் 230 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. தாகர் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்தப் புள்ளிவிவரங்களை தலிபான் அமைப்பு நிராகரித்துள்ளது.
இருதரப்பினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த விவரங்களை ஆப்கன் அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.