தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்தனா்.
காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ்கே பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரா்கள் உள்பட 183 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், இன்னும் 38 மணி நேரத்துக்குள் அதே போன்ற பயங்கரவாதத் தாக்குதல் அந்த விமான நிலையத்தில் நடத்தப்படக்கூடும் என்று உளவுத் தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை எச்சரித்திருந்தாா்.
இந்த நிலையில், காபூலில் உள்ள குவ்ஜா பக்ரா என்னுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் ஆப்கன் காவல்துறை தலைவா் ரஷீத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக வெடிபொருள் நிரப்பிய வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினா்.