இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள சீதாராம் நதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பெக்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருவதாக பொதுப்பணி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் பசுகி ஹதிமுல்ஜோனோ தெரிவித்தார்.
பெகாசி மாவட்டத்தில் நான்கு கிராமங்களிலும், கரவாங் மாவட்டத்தில் 34 கிராமங்களிலும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ரதித்யா ஜதி தெரிவித்தார். குறைந்தது 4,184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் பல இடங்களில் மின்சாரம் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.