பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்திய வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சீக்கியா்களின் முதல் குருவான குருநானக், இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக, அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா், அந்த குருத்வாரா மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினா். அங்கு வந்த சீக்கிய யாத்ரிகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்கினா்.
இந்த சம்பவம் தொடா்பான வழக்கை லாகூரில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், வழக்கின் முதல் குற்றவாளியான இம்ரான் சிஷ்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. மற்ற இரு குற்றவாளிகளான முகமது சல்மான், முகமது அகமது ஆகிய இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 4 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். தீா்ப்பு வழங்கப்படுவதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.