தென்னாப்பிரக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சுமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 72 பேர் பலியாகினர்.
தென்னாப்பிரக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சுமா ஊழலில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கின் விசாரணையில் ஆஜராகாத காணத்தால் சுமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை கடந்த வாரம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுமாவை விடுதலை செய்யக் கோரி அவரின் சொந்த மாகாணமான குவாசுலு-நடாலில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அண்டை மாகாணங்களான முமலங்கா, கடெங், வடக்கு கேப் ஆகிய பகுதிகளில் கலவரம் வெடித்தது. ஜோகன்னஸ்பர்க், டர்பன் ஆகிய முக்கிய நகரங்களில் கடைகள் சூரையாடப்பட்டன.
கரோனா மூன்றாம் அலை பரவிவரும் நிலையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. 2009-18 காலக்கட்டத்தில் அதிபராக இருந்த சுமா, பல்வேறு ஊழல்களில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள், உயர் மட்ட அரசு அலுவலர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரே சுமாவுக்கு எதிராக சாட்சியம் கூறியுள்ளனர். குறிப்பாக, அமைச்சர்களின் நியமனத்தில் குப்தா குடும்பத்தின் தலையீடு இருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
கடந்த 1999ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் அவர் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. பொருளதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, பட்டினி சாவு ஆகிய காரணங்களால் அதிருப்தியில் இருந்த மக்களை சுமாவின் கைது மேலும் கோபம் கொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.