முகப்பு
உலகம்

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த முதல் கணினி; எவ்வளவு ரூபாய் ஏலத்திற்கு வாங்கப்பட்டுள்ளது என தெரியுமா?

தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த கணினியை இதுவரை இரண்டு பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். முதலில் இந்த கணினி கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் இருந்துள்ளது. 

Updated On : 10 நவம்பர், 2021 at 5:50 PM
ஆப்பிள் நிறுவனம் தயாரித்த முதல் கணினி
பகிர்:

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த முதல் கணினிகளில் ஒன்றான ஆப்பிள் 1 கணினி தற்போது அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. மிகவும் அரிதான ஹவாய் கோவா மரத்தால் செய்யப்பட்ட ஆப்பிள் 1 இன்னும் கூட செயல்படுகிறது. 1976ஆம் ஆண்டு, வெளியான 200 ஆப்பிள் 1 கணினிகளில் இதுவும் ஒன்று. 

தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த கணினியை இதுவரை இரண்டு பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். முதலில் இந்த கணினி கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் இருந்துள்ளது. 

அதை தனது மாணவர்களில் ஒருவருக்கு அவர் 650 டாலருக்கு விற்றுள்ளார். இந்த கணினியுடன் இரண்டு கேசட் டேப்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பயனர் கையேடுகள் மற்றும் ஆப்பிள் மென்பொருள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து ஆப்பிள் 1 நிபுணர் கோரி கோஹன் கூறுகையில், "இது விண்டேஜ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி தொழில்நுட்ப காதலர்களின் சொர்க்கம். இந்த கணினி மிகவும் உற்சாகம் தரும் பொருட்களில் ஒன்று என்பதில் சந்தேகம் வேண்டாம்" என்றார். 

கடந்த 1976ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி, ஸ்டீவ் ஜாப்ஸ், வோஸ்னியாக், ரொனால்ட் வெய்ன் ஆகிய மூவரும் சேர்ந்து கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினர். ஆப்பிள் 1 கணினியைத் தயாரிக்கும் செலவுகளுக்காக ஜாப்ஸ் தனது விடபிள்யூ மைக்ரோபஸ் வாகனத்தையும் வோஸ்னியாக் தனது HP 65 கால்குலேட்டரை 500 டாலருக்கு விற்றனர்.  

அதன் பிறகு, உருவாக்கப்பட்ட ஆப்பிள் 1 கணினி 1976ஆம் ஆண்டில் 666.66 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. கணினித் உற்பத்தியில் மிக முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்த நிறுவனம் ஆப்பிள். ஒரு காலகட்டத்தில் பல்கலைக்கழகங்களிலும் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த கணினிகளை அனைத்து தரப்பினரிடையே எடுத்து சென்றதில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது.

முன்பெல்லாம், ப்ரோகிராம்கள் தெரிந்தவர்களால் மட்டுமே கணினிகளை இயக்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது, ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம் தான் அனைத்து தரப்பு மக்களும் எளிதில் பயன்படுத்தும் வகையிலான கணினிகளை தயாரித்தது. 1976ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் முதலில் தயாரித்த ஆப்பிள் 1 கணினி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 

உலகில் தற்போது மொத்தம் 20 ஆப்பிள் 1 கணினிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த 20 கணினிகளில் ஒன்று தான் தற்போது 400,000 டாலருக்கு (இந்திய  மதிப்பில் ரூ 2.97 கோடி) ஏலம் போகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.