ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் தலிபான்கள்: தகவல்
கடந்த ஆட்சியை விட இம்முறை அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.
பெண் உரிமை விவகாரம் போன்றவற்றில் சகிப்புத்தன்மையுடன் ஆட்சி செய்யப்படும் என தலிபான்கள் உறுதி அளித்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அவர்கள் இன்றே (வெள்ளிக்கிழமை) ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உலக நாடுகளின் கவனம் ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.
புதிய அரசு குறித்த அறிவிப்பு இன்று மதியம் தொழுகைக்கு பிறகு வெளியிடப்படும் என தலிபான் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 20 ஆண்டுகால போருக்கு பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆட்சி அமைப்பதில் தலிபான்கள் மும்முரம் காட்டிவந்தனர். எம்மாதிரியான ஆட்சி அமைக்கப்படும் என்பதை மேற்கத்திய நாடுகள் தீவிரமாக கவனித்துவரும் நிலையில், புதிய தலைவர்களுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதற்கு மத்தியில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷெரீப், தெற்கில் இருக்கும் கந்தஹார் ஆகிய நகரங்களை இணைக்கும் விமான சேவைகளை தொடங்கியுள்ளதாக ஐநா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், ஆப்கானிஸ்தானில் தூதரகத்தை தொடர்ந்து இயக்க சீனா உறுதி அளித்திருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் இன்று ட்வீட் செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்களை மீட்கும் வகையில் பிரிட்டன், இத்தாலி நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.