நியூசிலாந்தில் ஆறு மாதத்திற்கு பின் முதல் கரோனா மரணம்
நியூசிலாந்தில் ஆறு மாதத்தில் முதல்முறையாக ஆகஸ்ட் மத்தியில் உள்ளுரிலிருந்து கரோனா பரவியது உறுதி செய்யப்பட்டது.
நியூசிலாந்தில் ஆறு மாதத்தில் முதல்முறையாக கரோனா தொடர்பான மரணம் சனிக்கிழமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மிக தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நியூசிலாந்தில் கரோனாவால் ஏற்படும் 27ஆவது உயிரிழப்பு இதுவாகும். பிப்ரவரி 16ஆம் தேதிக்கு பிறகு, நிகழும் முதல் கரோனா பலி. மூதாட்டியின் வீட்டில் ஏற்கனவே ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தான் அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் தலிபான் தலைவர் இவர்தான்?
ஆறு மாதத்தில் முதல்முறையாக ஆகஸ்ட் மத்தியில் உள்ளுரிலிருந்து கரோனா பரவியது அங்கு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை, 782 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டபோதிலும் ஆக்லாந்தில் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
கரோனா உயிரிழப்பு குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், "தற்போது விதிக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆறு மாதத்தில் முதல்முறையாக நிகழ்ந்துள்ள கரோனா உயிரிழப்பு உணர்த்துகிறது" என்றார்.