போர்ப் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சித்து வருவதாகத் தகவல்.
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என ஈரான் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருபப்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அந்த செய்தியில், ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, ஓமன் அமைதிப் பேச்சுவார்த்தை அமைப்புகள் மூலம் அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க புதிய முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்ட அடுத்த நாளே, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறினார்.
அதாவது, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். நான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டேன். அவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். இதனை அவர்கள் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். விரைவாக அவர்களால் என்ன செய்திருக்க முடியுமோ அதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதிக காலம் காத்திருந்துவிட்டனர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தலைமை மதகுரு கமேனி பலி!
ஈரான் மீது, அமெரிக்க - இஸ்ரேல் படைகள் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா்.
கமேனி கொலைக்குப் பழிதீா்க்க தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்திருந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமையும் போா் தொடா்ந்ததால், அந்தப் பகுதிகளில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவும் நிலையில், பேச்சுவார்த்தைக்கான அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் ஏன்?
ஈரான், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த பிப். 28ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி இருந்தன.
இந்த தாக்குதலின்போது, தலைநகா் டெஹ்ரானில் ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், கமேலி பலியானார்.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தியிருந்ததால் போர் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Iran's defense chief is reportedly trying to resume talks with the United States amid rising tensions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.