வங்கதேசத்தில் சுதந்திரம் (1971) பெற்ற பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவுக்கு எரிபொருள் விலையேற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச அரசாங்கம் வெள்ளிக்கிழமை இரவு எரிபொருளின் விலையை 51.7 சதவிகிதம் உயர்த்தியது. சனிக்கிழமை முதல் இது அமலுக்கு வருமென அறிவிப்பை வெளியிட்டது. இதனால், வெள்ளிக்கிழமை மக்கள் இரவு கூட்டம் கூட்டமாக எரிபொருள் நிலையங்களுக்கு வந்தனர்.
பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் தங்களது சேவையை நிறுத்தி வைத்தது. நள்ளிரவுக்குப் பிறகு புதிய விலை அமல்படுத்தியப் பிறகு சேவையை தொடரும் என்ற அறிவிப்பு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வங்கதேச அரசின் மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சகம் தெரிவித்தபடி 89 டாகாவில் (வங்கதேச நாணயம்) இருந்து 135 டாகா வரை உயர்த்தியது. 0.94 டாலரிலிருந்து 1.43 டாலருக்கு மாற்றமடைந்துள்ளது. அதாவது 51.7 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது.
வங்கதேச பெட்ரோல் கார்பரேஷன் (பிபிசி) பிப்ரவரி முதல் ஜூலை வரை எரிபொருளை குறைவான விலைக்கு விற்றதால் 8,014.51 டாகா நஷ்டமானதாக தெரிவித்துள்ளது.
ரஷியா உக்ரைன் போரின் காரணமாக எரிபொருள் விலை உலகம் முழுவதும் விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷியாதான் உலகின் மிகப்பெரிய எரிபொருள் மற்றும் எரிவாயுவினை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமானது.
எரிபொருள் விலையேற்றத்தினால் உலகத்தின் வளர்ச்சி 2.9 சதவிகிதம் குறையுமென உலக வங்கி சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.