மீண்டும் தூதரக செயல்பாடுகள்: இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் வரவேற்பு
‘ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரக செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்; இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளத
‘ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரக செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்; இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினா். அந்த ஆட்சியை அங்கீகரிக்காத இந்தியா, அங்குள்ள தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைவரையும் திரும்பப் பெற்றது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவிகளை அளித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அந்நாட்டுக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த ஜூனில் மீண்டும் திறக்கப்பட்டு, தொழில்நுட்ப குழுவினா் பணியமா்த்தப்பட்டனா். ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்படும் உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக இக்குழு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரக ரீதியிலான இருப்பை மேற்கொள்ளும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு தலிபான்கள் அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆப்கன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆப்கனில் இந்தியாவால் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் நிறைவேறவும், புதிய திட்டங்கள் தொடங்கவும் இந்திய தூதரக இருப்பு முக்கியமானதாகும். இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தூதரக அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அவா்களுடன் ஒத்துழைத்து செயல்படுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய உண்மையான அரசை அமைக்க வேண்டும்; எந்த நாட்டுக்கும் எதிராகவும் தாக்குதல் நடத்த ஆப்கனை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா வலியுறுத்தியிருந்தது.