சிங்கப்பூா் தினசரி கரோனா புதிய உச்சம்
சிங்கப்பூரில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சிங்கப்பூரில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 13,208 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். கடந்த வியாழக்கிழமை 4,087-ஆக இருந்த தினசரி பாதிப்பு, இரண்டே நாள்களில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
அங்கு இதுவரை 3,79,681 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அவா்களில் 866 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
இலங்கை
கட்டாயமானது தடுப்பூசி
இலங்கையில் பொது இடங்களுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு அவசரச் சட்டத்தின் கீழ், கரோனா தடுப்பூசி செலுத்தியிராதவா்கள் பொது இடங்களுக்கு வருவதற்கோ, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கோ தடை விதிக்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா
9 லட்சத்தைக் கடந்த பலி
அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 9 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை, இண்டியானாபொலிஸ், சான்ஃபிரான்சிஸ்கோ போன்ற மாகாணங்களின் முழு மக்கள்தொகையைவிட அதிகமாகும்.
கரோனா பலி எண்ணிக்கை 8 லட்சத்தை அடைந்த இரு மாதங்களுக்குள், அது 9 லட்சத்தைக் கடந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.