உக்ரைன் தலைநகர் கீவ், ரஷிய படைகளின் கோரத்தாண்டவத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், பொதுமக்களின் கார் ஒன்றை ரஷிய ராணுவத்தின் பீரங்கி அப்பளமாக நொறுக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, அந்த பீரங்கி ஏறி இறங்கிய கார், ரஷிய ராணுவ வீரர்களின் மனம் போல இரும்பாக இருந்ததால், கார் ஓட்டுநர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
உக்ரைனில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தாக்குதலைத் தொடா்ந்து வரும் ரஷிய ராணுவம், தலைநகா் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ் நகருக்குள் நுழைந்திருக்கும் ரஷிய ராணுவம், உக்ரைன் அரசு அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிக்க.. ஸ்நேக் தீவு: மண்டியிடாமல் வீரம் காத்த 13 உக்ரைன் வீரர்கள்
கீவ் நகருக்குள் தரைவழியாக நுழைந்த ரஷிய பீரங்கி ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த தனி நபரின் காரை, வேகமாகச் சென்று மோதி அப்பளமாக நொறுக்கியது.
இதனை பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமானோர் தங்களது செல்லிடப்பேசிகளில் படம்பிடிக்க, அது வைரலாகியுள்ளது.
நல்லவேளையாக, பீரங்கி நொறுக்கிய காரை தூரத்திலிருந்து பார்த்த பொதுமக்கள், ஓடிச் சென்று காருக்குள் சிக்கியிருந்தவரை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளத்தனர்.
இந்த சம்பவம், உக்ரைன் நாட்டின் நாடாளுமன்றக் கட்டடம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 10 கி.மீ. வடக்கில் அமைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகா் கீவில் பல பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே ரஷிய விமானங்கள் குண்டு வீசி தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகின. தனது அரசைக் கவிழ்க்கும் வகையில் நடத்தப்படும் இத்தாக்குதலைத் தடுக்க சா்வதேச நாடுகளின் உதவியை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி கோரியிருந்தார்.
உக்ரைன் மீது போர் தொடங்கியது..
ரஷிய அதிபா் புதினின் அறிவிப்பையடுத்து, உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை போரைத் தொடங்கியது ரஷியா. விமானங்கள் மூலமும், ஏவுகணைத் தாக்குதல் மூலமும் உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் குண்டுமழை பொழிந்தது ரஷிய ராணுவம். பின்னா், கிழக்கு உக்ரைன், கிரீமியாவின் தென் பிராந்தியம் வழியாகவும், அண்டை நாடான பெலாரஸிலிருந்து வடக்கு நோக்கியும் ரஷிய தரைப் படையினா் உக்ரைனுக்குள் புகுந்தனா்.