இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக நியமித்து கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இன்று தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்துள்ளதாக அந்நாட்டின் அவைத் தலைவர் மகிந்த யப்பா அபேவர்தனே இன்று தெரிவித்துள்ளார்.
அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பிச் சென்றதற்கு உதவியதாக கூறி பிரதமர் ரணிலை உடனடியாக பதவி விலகக் கோரி அவரின் அலுவலகத்தின் முன்பு இன்று காலை முதல் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், அதிபர் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யாமல் இடைக்கால அதிபரை நியமனம் செய்தது இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.