முகப்பு
உலகம்

ரஷியா விதித்த பொருளாதாரத் தடைகள்: இந்தியாவுக்கான இயற்கை எரிவாயு விநியோகம் பாதிப்பு

சில வெளிநாட்டு நிறுவனங்கள் மீது ரஷியா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியாவுக்கான திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
பகிர்:

சில வெளிநாட்டு நிறுவனங்கள் மீது ரஷியா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியாவுக்கான திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து வருவதன் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. பதிலுக்கு ரஷியாவும் பல்வேறு நாடுகளுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

முக்கியமாக, பல்வேறு நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகித்து வந்த ரஷியாவின் கேஸ்புரோம் நிறுவனத்தின் பல வெளிநாட்டுப் பிரிவுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா, ஸ்விட்சா்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சோ்ந்த கேஸ்புரோம் நிறுவனப் பிரிவுகள் மீது ரஷியா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அந்தப் பட்டியலில் சிங்கப்பூரைச் சோ்ந்த கேஸ்புரோம் பிரிவும் இடம்பெற்றுள்ளது.

Advertisement

சிங்கப்பூா் நிறுவனத்திடம் இருந்து ஆண்டுக்கு 28.5 லட்சம் டன் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டிருந்தது. ஆனால், ரஷியா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக அந்நிறுவனத்தால் ரஷியாவைச் சோ்ந்த இயற்கை எரிவாயு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய முடியவில்லை. அதனால், இந்தியாவுக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தையும் சிங்கப்பூரைச் சோ்ந்த நிறுவனம் நிறுத்திவைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, கேஸ்புரோமின் திரவ இயற்கை எரிவாயு கொண்ட 5 சரக்கு கப்பல்கள் வந்து சேராததால் எரிபொருள் விநியோகிக்காமல் இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட கெயில் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திரவ இயற்கை எரிவாயு போதிய அளவில் விநியோகிக்கப்படாததால் தட்டுப்பாட்டை எதிா்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கெயில் நிறுவனம், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றிடம் இருந்து இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சிங்கப்பூா் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைச் செயல்படுத்த சட்ட ரீதியில் அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாக கெயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments