ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள குருத்வாராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் பற்றி கிடைக்கப்பெற்ற முதற்கட்ட தகவலின்படி, இன்று (சனிக்கிழமை) அதிகாலை குருத்வாராவின் வாயிற்பகுதியில் வெடிகுண்டுச் சப்தம் கேட்டிருக்கிறது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பிறகு, வளாகத்தின் உள்ளே, மற்றொரு வெடிகுண்டு சப்தம் கேட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, குருத்வாராவிலுள்ள சில கடைகள் தீப்பற்றி எரிந்தன. இந்தச் சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பு பொறுப்பேற்கவில்லை.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தான்: குருத்வாரா அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு?
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சுமார் 25 முதல் 30 பேர் வரை காலை வழிபாட்டிற்காக குருத்வாரா வளாகத்தில் இருந்திருக்கின்றனர். அப்போது தாக்குதல்காரர்கள் சிலர் வளாகத்தினுள் நுழைந்திருக்கின்றனர். இவர்களது தாக்குதலிலிருந்து 10 முதல் 15 பேர் வரை தப்பித்துள்ளனர். குருத்வாராவின் காவலர் தாக்குதல் நடத்தியவர்களால் கொல்லப்பட்டார். அவர் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இன்னும் 7 முதல் 8 பேர் வரை உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் தொடர்ந்து குறிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.