அதிகரித்து வரும் கரோனா...பரவி வரும் தவறான தகவல்கள்...உலக சுகாதார அமைப்பு விளக்கம்
கரோனா குறித்து பரவி வரும் தவறான தகவல்களுக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
கரோனா குறித்து பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்கள் உள்பட பல காரணிகளே உலகம் முழுவதும் கரோனா அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
இதை சுட்டிக்காட்டி பேசிய உலக சுகாதார அமைப்பின் கரோனா தொழில்நுட்பு குழு தலைவர் மரியா வான் கெர்கோவ், "கரோனா முடிந்துவிட்டது, ஒமைக்ரான் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது, இதுதான் கரோனாவின் கடைசி திரிபு போன்ற தவறான தகவல்கள் எல்லாம் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வளர இது வழிவகுக்கிறது" என்றார்.
கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், "ஒமைக்ரானுக்கு எதிராகவும் உயிரிழப்பு மற்றும் நோயின் தீவிர தன்மையை தடுப்பதிலும் தடுப்பூசி மிக சிறப்பாக செயலாற்றி வருகிறது. பிஏ.2 என்ற திரிபுதான் மிக வேகமாக பரவக் கூடிய திரிபாக இப்போது வரை உள்ளது. பிஏ.1 பிஏ.2 ஆகிய திரிபுகளை ஒப்பிடுகையில் தீவிரத்தன்மையில் வித்தியாசங்களை காணவில்லை.
இதையும் படிக்க | ஓராண்டுக்கு பிறகு சீனாவில் கரோனா பலி
பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் காரணமாக உயிரிழப்பும் அதிகரிக்கும்" என்றார். இந்த வாரம் அதிகரித்தும் வரும் கரோனா பாதிப்புகளை சுட்டிக்காட்டி, பெருந்தொற்று முடிய இன்னும் நிறைய காலம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்திருந்தது.