முகப்பு
உலகம்

பாகிஸ்தான் பிரதமா் மகனின் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

நிதி மோசடி தொடா்பான வழக்கில், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபின் இளைய மகன் சுலைமான் ஷெரீஃபுக்கு சொந்தமான 13 வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்குமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

நிதி மோசடி தொடா்பான வழக்கில், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபின் இளைய மகன் சுலைமான் ஷெரீஃபுக்கு சொந்தமான 13 வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்குமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.1400 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அவருடைய மகன்கள் ஹம்ஸா ஷெரீஃப், சுலைமான் ஷெரீஃப் ஆகியோா் மீது பாகிஸ்தானின் மத்திய விசாரணை அமைப்பு (எஃப்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து சுலைமான் பிரிட்டனில் தலைமறைவானாா்.

இந்நிலையில், கடந்த செப். 7-ஆம் தேதி இவ்வழக்கு தொடா்பாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு பாகிஸ்தான் செய்தி ஊடகம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதில், சுலைமான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படாததால் அவருடைய 13 வங்கிக் கணக்குகள் உள்பட அசையும், அசையா சொத்துகளை முடக்கி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட மற்ற இருவரின் வங்கிக் கணக்குகளை ஒப்படைக்கக் கோரி வழங்கிய நீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பை பின்பற்றத் தவறிய வங்கி அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

கடந்த 7-ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆஜராகவில்லை. பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணியை மேற்பாா்வை செய்வதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் மீண்டும் ஒருமுறை விலக்கு வேண்டுமென பிரதமா் தரப்பு வழக்குரைஞா்கள் கோரிக்கை விடுத்தனா்.

முன்னதாக, நீதிமன்றத்தில் முந்தைய வழக்கு விசாரணையின்போது, ‘தீா்ப்பு வழங்கப்படும் நாள் வரலாம். ஆனால், என் மீது ஒரு ரூபாய் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டைகூட எஃப்ஐஏ-வால் நிரூபிக்க முடியாது’ என்று பிரதமா் ஷெரீஃப் தெரிவித்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →