உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன்
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியது குறித்து..
உதயநிதியை தமிழ்நாட்டின் முதல்வராக்க மு.க. ஸ்டாலின் கனவு கண்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 1) விமர்சித்தார்.
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது:
''மதுரை என்றாலே வீரத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் போன பூமி. அத்தகைய மண்ணிற்கு பிரதமரின் வருகை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் கொலை எதிலும் ஊழல் நிலவும் ஆட்சி நடக்கிறது.
தமிழ்நாட்டில் குழந்தைகள், மாணவிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் அவலம் நடந்துக்கொண்டிருக்கிறது. மாணவர்கள் முதல் குடும்பத் தலைவர்கள் வரை குடிக்கு அடிமையாக்கப்பட்டுள்ள ஆட்சி நடக்கிறது.
எந்தவொரு திட்டங்களையும் நிறைவேற்றாததால் அனைத்து வகை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் ஆட்சி நடக்கிறது.
உதயநிதியை ஆட்சியில் அமரவைத்து முதல்வராக்கிவிடலாம் என்று கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின். அவரின் கனவை சுக்குநூறாக்கும் வகையில், இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவோம்.
ஊழலைத் தவிர வேறு எதையுமே செய்யாத திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதுணையாக இருப்போம். இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கவுள்ளார்.
நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என டிடிவி தினகரன் பேசினார்.