முகப்பு
உலகம்

இலங்கையில் ராஜபட்ச ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் 130க்கும் அதிகமானோர் காயம்

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது ராஜபட்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது ராஜபட்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, இரண்டாவது முறையாக அவசரநிலையை கடந்த வெள்ளிக்கிழமை அதிபா் பிரகடனம் செய்தாா். இந்த நிலையில் இலங்கையில், மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து இன்று ராஜிநாமா செய்தார். 

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, போராடி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது ராஜபட்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அனைத்து காவலர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மறு உத்தரவு வரும் வரை காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக இலங்கை காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் ராணுவத்தினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர். ராணுவத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே ஆளும் கட்சி எம்.பியும் முன்னாள் அமைச்சருமான அமரகீர்த்தி என்பவரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். அவர்கள் மீது எம்பி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் எம்பி அமரகீர்த்தி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மோராட்டுவா பகுதி மேயர் சமன் லால் பெர்னாட்டோவின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக இலங்கையில் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படுவதாகவும். ரயில்கள் இயக்கப்படாது எனவும் அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →