முகப்பு
உலகம்

மாதக்கணக்கில் வன்கொடுமை: இந்திய மாணவருக்கு நேர்ந்த அவலம்!

அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் சென்ற இந்திய மாணவரை வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததற்காக மூன்று பேரை அமெரிக்க காவல்துறைக் கைது செய்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் சென்ற  இந்திய இளைஞரை மாதக் கணக்காக வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்து, வேலை செய்யவைத்த மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அந்த மாணவர் பல மாதங்களாக மூன்று வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டு உணவு, கழிப்பிடம் எதுவும் அளிக்கப்படாமல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார். இந்த வழக்கில் அவரது உறவினர் ஒருவர் உள்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.   

அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் '911' அவசர எண்ணிற்கு அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 20 வயதான இந்திய மாணவரை வீட்டின் அடித்தளத்தில் பல மாதங்கள் அடைத்து வைத்து வேலை செய்ய வைத்தது தெரியவந்தது. இதனடிப்படையில் வெங்கடேஷ் ஆர் சத்தாரு, ஷ்ரவணா வர்மா, நிக்கில் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து, ரோல்லாவில் உள்ள மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற மாணவரை சத்தாரு, வீட்டில் அடைத்துவைத்து தனது ஐ.டி நிறுவனத்தின் வேலைகளைப் பார்க்க வைத்துள்ளார். வேலையை சரியாக முடிக்கவில்லை என்றால் மாணவனை நிர்வாணமாக்கி, இரும்புக் கம்பி மற்றும் பிவிசி பைப்புகளால் தாக்கியுள்ளார். அந்த மாணவர் ஒரு நாளில் கான்கிரீட் தரையில் மூன்று மணிநேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மாணவரின் உடலில் எலும்பு முறிவுகள், பல ஆராத காயங்கள் இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் மற்றும் வன்கொடுமைப் பிரிவிகளின் கீழ் வழக்கு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரியதான தகவல்களை உடனே தெரிவிக்குமாறு மக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →